business

img

பறவைக் காய்ச்சல் எதிரொலி.... தினமும் 2 கோடி முட்டைகள் தேங்கும் அபாயம்...

நாமக்கல்:
பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளாவில் முட்டை கொள்முதலுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் தினமும் முட்டைகள் தேக்கம் அடைய வாய்ப்பு உள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் வாத்துப் பண்ணைகள் அதிகம் உள்ளன. வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து கேரள கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நோய்ப் பரவலைத் தடுக்க சுமார் 36 ஆயிரம் வாத்துகளை அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பறவைக் காய்ச்சலை பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. குட்டநாடு, கார்த்தகாபள்ளி தாலுகாக்களில் பறவைகளின் இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விற்பனைக்கும் பயன் பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள் ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.நாமக்கல் சுற்றுவட்டார கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் சுமார் 2 கோடி முட்டைகள் மற்றும் பிராய்லர் கோழிகள் கேரளாவுக்கு செல்கின்றன. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளாவில் முட்டை கொள்முதலுக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் தினமும் முட்டைகள் தேக்கம் அடைய வாய்ப்பு உள்ளது. இதை தொடர்ந்து கோழிப் பண்ணையாளர்கள் உரிய முன்னேற் பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.இதை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள அனைத்து பண்ணைகளிலும் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளிக்கப் பட்டு வருகிறது. மேலும் ரசாயனத் திரவம் கலந்த தண்ணீரில் கால்களை நனைத்த பிறகே பண்ணைக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களும் கிருமிநாசினி மருந்து தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இதற்கிடையே அனைத்து பண்ணைகளிலும் கோழிகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாக வருவதாக கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

;